கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர் நாகேஷ் உத்தரவுப்படி, வேப்பனப்பள்ளி வனவர் ஸ்ரீமகேந்திரன் தலைமையில் வனக்காப்பாளர்கள் நடராஜ், நாராயணன் ஆகியோர் கொண்ட தனிகுழுவினர் நேற்று முன்தினம் மாலை நாரலப்பள்ளி காப்புகாடு, மாதிநாயனப்பள்ளி மூலக்காடு பகுதியில் வனப்பகுதியையொட்டி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஒரு பையில் 2 உடும்புகள் உயிருடன் இருந்ததும், அதை வனப்பகுதியில் இருந்து பிடித்து, விற்பனைக்காக கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த திப்பனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சின்னதம்பி(வயது 26) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது இவருக்கு உதவியாக இருந்த சிக்காரிமேடு பகுதியை சேர்ந்த நடேசன்(35), திப்பனப்பள்ளி அருண்(35) ஆகிய இருவரும் தப்பி ஓடியது தெரிய வந்தது. உடும்புகள் எடுத்து வரப்பட்ட மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கிருஷ்ணகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சின்னதம்பியை வனத்துறையினர் ஆஜர்படுத்தினர். இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி, சின்னதம்பி சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் தப்பியோடிய 2 பேரையும் வனத்துறையினர் தேடி வருகிறார்கள். இதற்கிடையே உயிருடன் இருந்த அந்த 2 உடும்புகளும் வனப் பகுதியில் விடப்பட்டன. வன விலங்குகளான மான், உடும்பு, முயல் போன்றவற்றை வேட்டையாடுதல், கடத்துதல் மற்றும் வன விலங்கு சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன் எச்சரித்துள்ளார்.