திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி அருகே உள்ள பெருமாள்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 35). விவசாயி. இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம், 3 ஏக்கர் குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலம் என்று மொத்தம் 5 ஏக்கர் நிலத்தில் தர்பூசணி பயிரிட்டிருந்தார். மழை பொய்த்து போனதாலும், போதிய அளவு தண்ணீர் பயிர்களுக்கு பாய்ச்ச முடியாததாலும் எதிர்பார்த்த மகசூல் கிடைக்க வில்லை. விவசாயத்தை நம்பி அவர் தன்னுடைய உறவினர் மற்றும் நண்பர்களிடம் பல லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்ததாக தெரிகிறது. இதனால் பணத்தை கொடுத்தவர்கள் திருப்பி தரும்படி தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. ரூ.3 லட்சத்தை இந்த மாத இறுதிக்குள் கொடுக்க வேண்டிய நிலை பாண்டியனுக்கு ஏற்பட்டது. தற்கொலை நிலத்தை விற்றாலும் உடனடியாக பணத்தை பெற முடியாத நிலை உருவானது. இதனால் பாண்டியன் மன உளைச்சலுடன் இருந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த வி‌ஷத்தை எடுத்து அவர் குடித்தார். மயங்கி விழுந்த அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பாண்டியன் பரிதாபமாக இறந்து போனார். அவருக்கு சங்கீதா என்ற மனைவியும், முகுந்தன் (2), தேஜேஷ் (1) என்ற மகன்களும் உள்ளனர். விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ஆரணி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.