சிலை கடத்தலில் இரு அமைச்சர்களுக்கு தொடர்பு- பொன். மாணிக்கவேல் பகீர் தகவல்!
சிலை கடத்தல் விவகாரத்தில் தமிழகத்தை சேர்ந்த இரு அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், அது தொடர்பான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறப்பட்ட தகவலால் பரபரப்பு!
பழவலூர் சிலை கடத்தல் வழக்கில் பொன். மாணிக்கவேல், தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்ததாகவும், எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரியும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டி.எஸ்.பி காதர் பாஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று (ஜூலை 24) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் தங்களையும் இணைக்ககோரி பொன். மாணிக்கவேல் மற்றும் யானை ராஜேந்திரன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். பொன் மாணிக்கவேலின் இணைப்பு மனுவை விசாரணைக்கு ஏற்று கொண்ட நீதிபதி, யானை ராஜேந்திரன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
பின்னர் நடைபெற்ற வழக்கு விசாரணையில், பொன். மாணிக்கவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிலை கடத்தல் விவகாரத்தில் தமிழகத்தை சேர்ந்த இரு அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், அது தொடர்பான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து உரிய ஆதாரங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய பொன் மாணிக்கவேல் தரப்பிற்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
சிலைக் கடத்தலில் அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக பொன். மாணிக்கவேல் கூறுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே அவர் ஐஜி பதவியில் இருந்தபோது, அமைச்சருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததுடன் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது சிலை கடத்தல் வழக்குகளில், அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக பொன் மாணிக்கவேல் தரப்பில் கூறப்பட்ட தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.